TN Governor Stops Minister Senthil Balaji Dismiss
தமிழக மின்விலக்கு, ஆயத்தீர்வை மற்றும் மின்சார அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் கடந்த அதிமுக ஆட்சியின்போதும் அமைச்சராக இருந்தார்.
அக்காலக்கட்டத்தில் வேலை வாய்ப்பு வழங்க பணம் பெற்றதாக அப்போதைய எதிர்க்கட்சியான திமுகவால் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகார் அளித்தார். மேலும் அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்த வழக்கில் பல ஆண்டுகள் கழித்து செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் நெஞ்சுவலி காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் வகித்த அமைச்சர் பொறுப்புகள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமிக்கு கூடுதலாக வழங்கப்பட்டது. செந்தில் பாலாஜி பொறுப்புகள் இல்லாத அமைச்சராக தொடர்வார் என திமுக அரசு கூறியது.இதற்கு அப்போதே ஆளுனர் ஆர்.என். ரவி ஆட்சேபம் தெரிவித்தார். தீவிரமான குற்றச்சாட்டில் உள்ள செந்தில் பாலாஜி அமைச்சரவை பொறுப்பில் தொடர தார்மீக உரிமை இல்லை என்றார்.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மீது, வேலை வாங்கி தருவதாக, பணமோசடி செய்தல் உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகள், கடுமையான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி, தன் மீதான விசாரணைக்கும் அவர் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார். தற்போது நீதிமன்ற காவலில் அமலாக்கத் துறை விசாரணையில் உள்ளார்.
அதுமட்டுமில்லாமல், தமிழக காவல் துறையிலும் அவர் மீது சில வழக்குகள் உள்ளன. இதனால் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர்ந்தால் அரசு இயந்திரத்தின் செயல்பாடு பாதிக்கப்படும். இந்நிலையில், அவரை, அமைச்சரவையில் இருந்து, ஆளுநர் உடனடியாக நீக்கியுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுத்தி வைப்பு
இந்த நிலையில் நேற்று மாலை 7 மணியளவில் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பை ஒன்றை வெளியிட்டார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சியினர் தரப்பில் இருந்து கடும் கண்டனம் எழுந்தது. இதனையடுத்து செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை நள்ளிரவில் ஆளுநர் ரவி நிறுத்தி வைத்தார்.