Tamilnadu Schools Reopen 2023 Postpone
Tamilnadu Schools Reopen 2023 Postpone தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் பள்ளி அளவில் அந்தந்த மாவட்ட வாரியாக ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. தேர்வுகள் முடிந்த பிறகு ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.அதேபோல், 10 மற்றும் பிளஸ் 2 உள்ளிட்ட பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கும் தேர்வுகள் முடிந்த பிறகு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த வாரம் 10 ,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
தற்போது பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையில் இருந்து வரும் நிலையில், ஜூன் 1-ந் தேதி, 6 முதல் பிளஸ் 2 வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்படும் என்றும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஜூன் 5-ந் தேதி பள்ளிகள் தொடங்கும் என்றும் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

வெயிலின் தாக்கம்
எனினும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்பதே பெற்றோர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நிலையில், இன்று திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி நாளை அறிவிக்கப்படும் என்றார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நாளை அறிவிக்கப்படும்” என்றார். வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து மாவட்ட கல்வி அலுவலருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
அரசுக்கு கோரிக்கை வைக்கும் தலைவர்கள்
கோடை வெப்பத்தின் கடுமை தணியும் வரை ஒரு வாரத்திற்கோ, 10 நாட்களுக்கோ அரசுப் பள்ளிகள் திறப்பை ஒத்தி வைப்பதால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. கல்வியைவிட மாணவர்களின் உடல்நலன் மிகவும் முதன்மையானது. இதைக் கருத்தில் கொண்டு, அரசுப் பள்ளிகள் திறப்பை குறைந்தது ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
“தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது எனவே பள்ளிகள் திறப்பதை மாற்றி அமைக்க வேண்டும். பள்ளிகளை ஜூன் ஒன்றாம் தேதியில் இருந்து 15 நாட்கள் கழித்து திறக்க வேண்டும்” என்றும் சீமான் வலியுறுத்தினார்